சுனாமி பேரலையினால் உயிர்நீத்த மக்களை நினைவு கூரும் முகமாக 26.12.2019 அன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
அரசாங்க அதிபர் இங்கு கருத்து வெளியிடுகையில் எமது மாவட்டத்தில் எட்டு பிரதேசசெயலகப்பிரிவுகளை சேர்ந்த 68 கிராம சேவகர் பிரிவுகளில் பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன.
இச்சுனாமி பேரலையினால் 2840 பேர் மரணமடைந்ததோடு 908 பேர் காணாமல் போயும் உள்ளனர்.மேலும் 18041 பேர் தமது வீடுகளையும் இழந்த நிலையே மட்டக்களப்பில் காணப்பட்டது.
இவ்வாறான இயற்கை சீற்றத்தினால் உயிரிழந்த காணாமல் போனோர் ஆகியோருக்கு நினைவு கூரும் நாளாக இலங்கை அரசு இத்தினத்தை தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ம் திகதி 9 மணி 25 நிமிடம் வரையில் அனுஷ்டிக்கபட்டு வருகின்றது.
இன்றுடன் சுனாமி பேரலை ஏற்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகிய நிலையில் இவ்வனர்த்தத்;தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் மற்றும் காணால் போனோரின் ஆத்மா சாந்தி அடைவதற்காக பிராத்தனையும் நடைபெற்றது.
இலங்கையில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 35 ஆயிரம் பேர்களின் உயிர் காவு கொள்ளப்பட்டது.அதே போன்று 5637 பேர் காணாமல் போயிருந்தனர்.9 இலட்சம் வீடுகள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இச்சுனாமி பேரலையினால் 40 வீதமான சிறுவர்களின் உயிர்கள் இழக்கப்பட்டிருந்ததும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர வேண்டியதாகும்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த், காணி மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட பிரதம கணக்காளர் திரு க.ஜேகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் திரு எ.எஸ்.எம் சியாத், பிரதம உள்ளக கணக்காளர் திருமதி இந்திரா மோகன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


















