இலங்கையின் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்னியலாளர்களுக்கு தொழில் துறை உரிமம்(லைசன்)குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு 06.02.2020 அன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 1200 க்கு மேற்பட்ட மின்னியலாளர்களுக்கும் உரிமம் தெடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக இந்த செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அம்மணி அவர்கள் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மின்னியலாளர்களுக்கான உரிமம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தினை நிர்மாண கைத்தொழில் அதிகார சபையுடன் இணைந்து பல அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து இச் செயற்பாட்டினை முன்னெடுத்து மின்னியலாளர்களின் தராதரத்தினை உயர்த்தி அவர்களுக்கு உள்ள அங்கீகாரத்தினை விளக்குவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேரடியாக ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்விற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் திரு.ஜயனாத் கேரத் மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொது தொடர்பாடல் பிரிவின் உதவிப்பணிப்பாளர் திரு.ஜயசூரியன், ஆகியோருடன் தொழிநுட்பக்கல்லுரிகளின் இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்னியலாளர்களை தரம் உடையவர்களாக வலுப்படுத்தி வருகின்ற அரசாங்கத்தின் திட்டத்தின் மூலம் சரியான முறையில் எல்லா பயிற்சியாளர்களும் பயன்பெற வேண்டும். இங்கு வழங்கப்படவிருக்கின்ற(NVQ-3) தரச் சான்றிதழின் ஊடாக அங்கிகாரத்தினைப் பெற்று சரியான தொழில் திறமையினை பெற்றுக் கொண்டு வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இச் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினோராவது நிகழ்வாக நடைபெறுவதாக உதவிப்பணிப்பாளர் திரு.ஜயசூரியன் தெரிவித்தார்.















