DSC 1054 reபிரதேச மட்டத்தில் கலைஞர்களையும் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் கலாசார நிகழ்வுகள் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த விசேட திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு வவுணதீவு கலாசார பேரவையும், கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த 20.02.2020 அன்று நடைபெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதாகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பிரதேச கலாசார விழாவில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் இப்பிரதேச கலாசார கலைத்துறைக்கு மண்முனை மேற்கு பிரதேசத்தில் பங்காற்றிய கலைஞர்கள் பொன்னாடை போர்த்தியும், மலர் மாலை அணிவித்தும் சிறப்பு விருதுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

இவ் விழா ஆரம்பத்தில் பிரதேசத்தின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் பண்பாட்டு பவனி ஒன்று வவுணதீவு சந்தியிலிருந்து விழா மண்டபம் வரை இடம் பெற்றதுடன் இவ் விழாவினையொட்டி "அகணி" என்ற பெயரில் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதல் பிரதி கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.ச.நவநீதனுக்கு வழங்கி வைக்கப்பட்டது. விழா இறுதியில் இப்பிரதேச பாரம்பரிய கலைகள் கொண்டதான கலாசார நிகழ்வுகள் பலவும் இடம் பெற்றன.

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.சி.ஜெயசங்கர், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சுதா சதாகரன், கணக்காளர் வே.வேல்ராஜசேகரம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.த.நிர்மல்ராஜ், நிர்வாக உத்தியோகத்தர் திரு.எம்.எஸ்.எம்.றஊப், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கே.தங்கத்துரை, மாவட்ட கலாசார இணைப்பளர் திரு.த.மலர்ச்செல்வன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.எம்.ஏ.சீ.ஜெய்னுலாப்தீன் உட்பட பல அதிகாரிகளும், பொது மக்களும் கலைஞர்களும், பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த கலைஞர் கௌரவிப்பில் களிமடு பகுதியைச்சேர்ந்த கே.தம்பித்துரை மாந்திரீகத் துறைக்கும், மண்டபத்தடி கன்னக்குடா பகுதியைச்சேர்ந்த க.மாணிக்கப்போடி சோதிடத் துறைக்கும், மண்டபத்தடி பகுதியைச்சேர்ந்த பா.தர்மலிங்கம் வாய்மொழிப்பாடகர் துறைக்கும், கரவெட்டி பகுதியைச்சேர்ந்த க.இரத்தினசிங்கம் அண்ணாவியார் துறைக்கும், விளாவட்டான் பகுதியைச்சேர்ந்த த.அருளானந்தம் தோல்வாத்தியத் துறைக்கும், இளம் கலைஞர் வரிசையில் விளவட்டான் பகுதியைச்சேர்ந்த அ.ரகு தோல்வாத்தியத் துறைக்கும் கௌரவித்தல் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பிரதேச மட்ட கலாசார விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலாசார போட்டி நிகழ்ச்சிகளில் திறமை காட்டிய பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில் எமது தமிழ் இனத்தின் வரலாறுகளை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கும் எமது பாரம்பரிய கலைகளை வளர்த்துச் செல்வதற்கும் இவ்வாறான கலாசார விழாக்கள் வழிவகுக்கின்றன. இதனடிப்படையில் எமது பாரம்பரிய கலைகளை வளர்க்கவும் எதிர்கால சந்ததியினருக்கு அறிவூட்டவும் இவ்வாறான விழாக்களை சிறப்பாக நடாத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். மேலும் வவுணதீவு பிரதேசம் பெருமளவு கிராமங்களை கொண்டிருப்பதால் எதிர்காலத்தில் சனச்செறிவுள்ள வெவ்வேறு கிராமங்களில் நடாத்தி கூடுதலான கலை ஆர்வமுள்ள மக்களை உள்வாங்கிக்கொள்ள முயற்சிப்பது சாலச்சிறந்தது என தெரிவித்தார்.

DSC 1034 reDSC 1052 reDSC 1054 reDSC 1059 reDSC 1065 reDSC 1070 reDSC 1106 reDSC 1141 reDSC 1146 reDSC 1148 reDSC 1161 re