2020 இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச பிரிவுகளிலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அம்மணி அவர்களின் மேற்பார்வையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.ஹாலித்தீன் அமீரின் நெறிப்படுத்துதலில் 22.02.2020 அன்று சிறப்பாக நடைபெற்றன.
சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர்களின் ஏற்பாட்டில் இளைஞர் பாராளுமன்றத்திற்கான தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்தலில் அதிக இளைஞர் யுவதிகள் வாக்களிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டதைக் காணமுடிந்தது. இளம் தலைவர்களைத்தெரிவு செய்யும் இந்தத் தேர்தலின் செயற்பாடுகளை பரிசீலிப்பதற்காக அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அம்மணி அவர்கள் வாக்களிப்பு நடைபெற்ற பிரதேச செயலகங்களுக்கு நேரில் சென்று கண்காணித்தார்.
மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களைச் சார்ந்த 345 கிராமசேவகர் பிரதிநிதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இளைஞர் கழகங்களைச் சார்ந்த இளைஞர் யுவதிகளும் இத்தேர்தலில் வேட்பாளர்களாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும். இதில் வேட்பாளர்களுக்கான வயதெல்லை 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர் கழகங்கள் அல்லாதோரும் தேர்தலில் போட்டியிட முடியும். அதேவேளை இளைஞர் கழகங்களுக்கான வயதெல்லை 15 முதல் 29 வயதிற்குட்பட்ட கழக உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி வாய்ந்தவர்களாகக் கருதப்படுவர்.
இத் தேர்தலில் 18 முதல் 29 வரையான சகல மாவட்டத்தின் சகல இளைஞர்களும் வாக்களிப்பதற்கு தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கென 1979ம் ஆண்டு 9ம் இலக்க இளைஞர் சேவைகள் சட்டத்தின் நோக்கங்களை அடைதல் எனும் சட்டத்திற்கூடாக இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பானது நிதி மற்றும் நியாயமான ஒரு சமூகத்தின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து குடிமக்களுக்கு கல்வி கற்பித்தல், தேசிய சர்வதேச பொருளாதார சமூக அரசியல் கலாசார சூழலினை சரியான முறையில் பேணுவதற்கான ஒரு ஆளுமை மிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலே இச் செயற்பாடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 2020ம் ஆண்டு இளைஞர் பாராளுமன்றத்திற்கான ஒவ்வொரு பிரதேச செயகத்திலிருந்தும் 334 பிரதி நிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதனைத் தவிரவும் உயர் கல்வி மற்றும் பிற துறைகள் சார்ந்த பிரதிநிதிகள் 22 பேர்கள் பிறிதொரு தினத்தில் தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்படுவர். மொத்தம் 356 பிரதிநிதிகள் இப்பாரளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவர். இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என முக்கிய துறைகளுக்கான அமைச்சுப் பதவிகளும் இப்பிரதிநிதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டோர்களுக்கு பதவிகள் வழங்கப்படும்.





