
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்படும் மாதர் அபிவிருத்தி பயிற்சிநிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட்ட யுவதிகளின் ஆக்கப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கும் அதனூடாக சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் விசேட கண்காட்சி 27.02.2020 அன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா ஜஹம்பத் அவர்கள் இந்துக்கல்லூரியில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இக்கண்காட்சி 29ம் திகதி நிறைவு பெறவுள்ளது. இக்கண்காட்சியில் பயிற்சி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், ஆடை அலங்காரப்பொருட்கள், கைத்தறி நெசவு உற்பத்திகள், ஆடவர்களுக்கான அலங்காரப்பொருட்கள், வீட்டு அலங்காரப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் தயாரிக்கப்பட்ட பாவனைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் பார்வையிடவும் நியாய விலையில் கொள்வனவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட ஆக்கப் பொருட்களே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் கௌரவ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.வியாழேந்திரன், மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் திரு.சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திரு.ஏ.எல்.ஏஅசிஸ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, திணைக்கள உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.







