
மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சந்தை வழிகாட்டுதலுக்கான திறவுகோல் எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலகம் மனிதவள மேம்பாட்டுதிறன் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் எஸ்கோ நிறுவனம் இணைந்து இத்தொழில் வழிகாட்டும் சந்தையினை 27.02.2020 அன்று மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள செல்வநாயகம் மண்டபத்தில் நடாத்தியது.
இச்சந்தை நிகழ்வை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ. நவேஸ்வரன், எஸ்கோ நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி கோதை, தொழில்நுட்பக்கல்லூரி அதிபர்கள், தேசிய தொழில் பயிற்சி கைத்தொழில் அதிகார சபை, இலங்கை சமுத்திரப்பல்கலைக்கழகம், தனியார் தொழில் வழங்குனர் தொழிலினை பெற்றுக்கொள்ளும் இளைஞர் யுவதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் மனிதவள மேம்பாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினூடாகவும் தொழில்நுட்பக் கல்லூரிகளினூடாகவும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களினூடாகவும் பயிற்சிகளை பயிற்றுவித்து துறைசார்ந்த தொழில்களில் நியமிப்பதினூடாக வினைத்திறனான தொழிலினை செய்வற்கு ஏதுவானவர்களாக இந்த இளைஞர் யுவதிகளை மாற்றியமைப்பது சாலச்சிறந்ததாக கருதுவதாக குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளை திறன் அபிவிருத்தியினை மேம்படுத்தி தனியார் துறைகளினுள் வேலைகளுக்கு அமர்த்துகின்ற ஒரு நிகழ்வாகவே இந்நிகழ்வு அமைந்திருந்தது. தனியார் துறையினர்களின் தொழில்நுட்பங்களில் தற்போது 547 வெற்றிடங்கள் காணப்பட்டதாகவும் அவைகளை இன்று வேலைக்கு உள்வாங்கி அவர்களின் வேலை அனுபவத்தினை மேம்படுத்தி தொழில் நியமங்களின் அடிப்படையில் தொழில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாரிய தொழில் நிறுவனங்களும் நடுத்தர சிறு நிறுவனங்களும் பங்கெடுத்துக் கொண்டு தங்களின் நிறுவனத்திற்கு தேவையான தொழில் தகுதியுள்ள இளைஞர் யுவதிகளுக்காக தொழில்வழங்குவற்கு முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர் யுவதிகளின் திறன்விருத்தியினை மேம்படுத்துவதற்கு தொழில்பயிற்சி நிறுவனங்களினூடாகவும் அரசதனியார் நிறுவனங்களினூடாகவும் பயிற்சிகளை வழங்குவதற்கு மனிதவள மேன்பாட்டுத்திணைக்களமும் மாவட்டசெயலகங்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன .







