DSC 0847 resized

கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிக்க ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமையை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 31.03.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 மாவட்டத்தில் ஊடரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் தமது அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய வெளியில் வரும்போது சமுக இடைவெளியைப் பேணி நடந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விடயங்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.

இதன்போது மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் பொருட்களைக் கொள்வனவு செய்யவரும் பொதுமக்களின் நெரிசலினைக் குறைக்கும் விதத்தில் பொதுச்சந்தைகளை மூடி மட்டக்களப்பு வெபர் மைதானம், கல்லடி சிவானந்தா வித்தியாலய மைதானம், ஊரணி சரஸ்வதி வித்தியாலய மைதானம் உட்பட ஊரணி லீனர் பாக் போன்ற நாலு இடங்களிலும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதுடன் சகல பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகளையும் திறந்திருப்பது எனவும் ஏனைய அனைத்துக் கடைகளும் திறக்காதிருப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்ய பிரதேச செயலாளர்களின் சிபாரிசுடன் பொலிஸ் அனுமதியினைப் பெற்று செயற்பட ஏற்ற நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவ்வாகனங்களுக்கான விசேட ஸ்டிக்கர்களை பொலிசார் ஒட்டும் நடவடிக்கையினை மேற்கொள்வது எனவும், அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்கள் தமது அலுவலக அடையாள அட்டையினையும், திணைக்களத்தலைவரின் கடிதத்தினையும் இணைத்து அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளைப் பிரதேசத்தில் இருந்து மறக்கறிவகைகளைக் கொண்டுவருவதில்லை எனவும் உள்ளுர் உற்பத்திகளை மாத்திரம் பயன்படுத்துவது எனவும் இந்நடைமுறையினை 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பொதுமக்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மிக அவசிய தேவை ஏற்படின் குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வெளியில் வரலாம் எனவும் அனைவரும் வீடுகளில் இருந்து தமது குடும்பத்தையும், சமுகத்தையும், மாவட்டத்தையம் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.

இவ்விசேட கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர மேயர் திரு தியாகராஜா சரவணபவான், மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மாஅதிபர் லக்ஸ்ரீ விஜயசேன, இராணுவத்தின் 23வது படைப்பரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜயசுந்தர, வைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC 0851 resized DSC 0853 resized DSC 0856 resized DSC 0857 resized

DSC 0860 resized DSC 0870 resized