DSC 0893 resized

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவிவருவதுடன் மரணங்கள் அதிகரித்துச் செல்கின்ற இக்காலப்பகுதியில் அதனை எதிர்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமையை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 03.04.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏற்றவகையில் விசேடமாக ஏற்பாடு செய்துள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவு 6 தீவிர சிகிச்சைக் கட்டில்களையும், 48 விசேட கட்டில்களையம் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் வைத்தியசாலைக்கு வருகின்ற கொரோனா தொற்றாளர்களை உள்ளெடுப்பதற்கான பாதுகாப்பான பிரத்தியேக வாசல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதும் ஆய்வுகூடத்திற்கான அவர்களது மாதிரிகள் உடன் பெறப்பட்டு அனுப்பப்படுவதாகவும் அதன் முடிவுகள் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது எனவும், மேலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதியில் 20 ஐ.சி.யூ கட்டில்களும், ஆண்களுக்கும், பெண்களுக்குமாக 96 கட்டில்கள் கொண்ட விடுதியும் அமைக்கப்பட்டு வருவதாகவும் இதற்கான நிதியுதவி சுகாதார அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாகவும், தங்களிடமுள்ள சீ.ரி. ஸ்கேன் இயந்திரத்திற்கு மேலதிகமாக 120 சிலைட் கொண்ட புதிய சீ.ரி இயந்திரத்தினை சுகாதார அமைச்சினூடாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அது இன்னும் 3 வாரங்களில் கிடைக்கக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலனி உறுப்பினர் டாக்டர் சுந்தரேசன் கருத்து தெரிவிக்கையில் 75 வீதமான சமூக இடைவெளி ஊரடங்கு சட்டத்தின் மூலமாகப் பேணப்படுவதாகவும் இது மட்டக்களப்பு மாவட்டத்தின் நல்ல நிலைமை எனவும் இது தொடரப்படுமாக இருந்தால் 3 அல்லது 4 மாதங்களில் இத்தொற்றினைக் கட்டுப்படுத்த முடியும் என அமெரிக்க ஆய்வுகள் குறிப்பிடுவதாகத் தெரிவித்தார். சமூக இடைவெளி 70 வீதத்திற்குக் குறையுமாக இருந்தால் பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும் எனவும், பொதுமக்கள் முக இடைவெளியினைப் பேணுவதோடு வீடுகளில் தங்கி இருப்பதுடன், கைகளை அடிக்கடி முறையாக கழுவிக் கொள்வதுடன் முகக் கவசங்களை முறையாக அணிந்து கொள்ளவேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் நடைமுறைப் படுத்தப்படவேண்டிய முக்கிய விடயங்களாக, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் பொது இடங்களில் சமூக இடைவெளியினைப் பேணுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பொலிசாருடன் இணைந்து செயற்படுவதற்கு அடையாளப்படுத்தக்கூடிய ரீசேட் அணிந்த தொண்டர்களை இணைத்துக் கொள்வதெனவும் இத்தொண்டர்களை உள்ளுராட்சி மன்றங்களினூடாகப் பெற்றுக் கொள்வது எனவும், இவ்விடங்கள் அனைத்திலும் ஒலிபெருக்கி சாதனங்கள் மூலமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் தீர்மாணிக்கப்பட்டது.

காசுத்தாள்கள் பயன்படுத்துவதில் மக்களுக்கு அச்சநிலை ஏற்பட்டிருப்பதால் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வினை ஏற்படுத்த அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவதெனவும் இந்த விடயத்தை மட்டக்களப்பு அரச வைத்தியர்கள் சங்கம் முன்னெடுக்குமெனவும், தொற்றுநீக்கி விசிறும் நடவடிக்கையானது சுகாதாரப்பிரிவு, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொலிசாரினாலும் தொடராக மேற்கொள்ளப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கடற்றொழிலாளர்கள் கரவலை மீன்பிடியில் ஈடுபடலாமெனவும், ஆழ்கடலுக்குச் சென்று பலநாட்கள் தங்கி மீன்பிடிப்பதனால் கிடைக்கும் மீன்களை வெளிமாவட்டங்களுக்கு சந்தைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக மறு அறிவித்தல் வரை ஆழ்கடலுக்குச் செல்லாமலிருப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்விசேட கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர மேயர் திரு தியாகராஜா சரவணபவான், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மாஅதிபர் லக்ஸ்ரீ விஜயசேன, இராணுவத்தின் 23வது படைப்பரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜயசுந்தர, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். அச்சுதன், வைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC 0874 resized DSC 0876 resized DSC 0886 resized DSC 0888 resized

DSC 0891 resized DSC 0896 resized DSC 0899 resized DSC 0901 resized

DSC 0902 resized