DSC 0211 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் முடங்கியிருக்கும் சிறுவர்களுக்கு உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களுக்கு வர்ணந்தீட்டும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட செயலக சிறுவர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கமைய இயல்புநிலை வழமைக்குத் திரும்பியிருக்கும் நிலையில் கொரோனா அச்சத்திலிருந்து சிறுவர்களின் உளவியல் செயற்பாடுகளை மாற்றியமைத்து அது தொடர்பான விழிப்புணர்வூட்டும் வகையில் ஆக்கபூர்வமாக தயாரிக்கப்பட்ட இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான விபரங்கள் அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களினால் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கு 14.05.2020 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. 

இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் வாயிலாகவும் தலா 25 சிறுவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இவ்வோவியங்கள் வழங்கப்பட்டு அவர்களால் வர்ணந்தீட்டப்பட்ட சிறந்த ஓவியங்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வீ.குகதாசன் அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்குத் தகவல் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்த காலப்பகுதியில் களத்தில் நின்று செயற்பட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள்பாராட்டுத் தெரிவித்ததுடன் பிரதேச செயலகங்கள் வாயிலாக தெரிவு செய்யப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையினை அதிகரித்து அவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அவர்களது ஓவியம் வரையும் அறிவினையும், திறமைகளையும்  இனங்கண்டு கொள்ளவேண்டுமெனத் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திரு. ஏ.நவேஸ்வரன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

DSC 0199 resized DSC 0193 resized DSC 0204 resized DSC 0207 resized

DSC 0220 resized DSC 0215 resized DSC 0211 resized