
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளிலிருந்து மீள்சுழற்சி மூலம் மின்சக்தி மற்றும் எரிபொருட்களான பெற்றோல், டீசல் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய திட்டம் ஒன்று ஆராயப்பட்டு வருகின்றுது. கனடா அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் இத்திட்டம் இந்தியா ஊடாக கொழும்பு மாநகரசபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைபு முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முதலாக அமுல்ப்படுத்தப்படவுள்ள இத்திட்டமானது மட்டக்களப்பில் பரீட்சார்த்த திட்டமாக நடைமுறைப்படுத்துவது சம்மந்தமான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது திண்மக்கழிவுகளிலிருந்து இத்திட்டத்தினூடாக மின்சக்தியையும், பெற்றோல் மற்றும் டீசலினையும் பெற்றுக்கொள்ள முடியுமென டபிலியூ. ரீ. டெக் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான சந்தனம் பிச்சை விளக்கமளித்தார். அத்துடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துளைப்புகளை வழங்குமாறும் அவர் அரசாங்க அதிபரைக் கேட்டுக்கொண்டார்.
மேலும் அராசங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை சூழலுக்குப்பாதிப்பின்றி முறையாக அகற்றுவதில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இது போன்ற திட்டங்களின் மூலம் திண்மக்கழிவுகளினூடாக சக்திகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்க முடியுமென அவர் தெரிவித்தார். மேலும் இலங்கையில் முதன் முதலாக அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பரீட்சாத்த திட்டத்தை மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தவிருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். அத்துடன் இத்திட்டம் தொடர்பான திட்டவரைபு அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இவ்விசேட கலந்துரையாடலில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களான திரு. சந்தனம்பிச்சை, திரு. நெவில் மெல்ரோய், திரு. அல்பிரட் சம்பத், டபிலியூ. ரீ. டெக் நிறுவனத்தின் இணைப்பாளர் திரு. பீ. குமார ரத்னம், மாவட்ட தகவல் அதிகாரி திரு. வடிவேல் ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






