
மகாவலி கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் உலக வங்கி நிதி உதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட மறுவயல் பயிர்களின் உற்பத்தியின் அறுவடைகள் வைபவ ரீதியாக தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்த விசேட திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் நெடியமடு கிராமத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கடலை உற்பத்தியின் அறுவடை விழா 10.07.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் வைபவ ரீதியாக நடைபெற்றது.
மட்டக்களப்பு விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் அனுசரனையுடன் வவுனதீவு விவசாய போதனாசிரியர் திரு.ஏ. டபல்யு. எம். சிபான் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்ட பணிப்பாளர் திரு.ஆர்.எம். ஆரியதாச, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, வவுணதீவு பிரதேச செயலாளர் திரு.ஏ. சுதாகரன் உட்பட உயர் அதிகாரிகள் மற்றும் கிராம விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் கருத்து வெளியிடுகையில் எதிர்வருங்காலங்களில் உலக வங்கியின் உதவியில் காலநிலை மாற்றத்திற்கேற்ற விவசாய உற்பத்தியில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தவுள்ளது. எதிர்காலத்ததில் விவசாயிகள் இதன் பயனை முழுமையாக அடைய முயற்சிக்க வேண்டும். மேலும் கொவிட் 19 கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாததை தவிர்க்கும் பொருட்டு அரசாங்கம் முன்னேற்பாடான விவசாய அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது எனக்குறிப்பிட்டார்.







