
மகளிர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் நிறுவப்பட்டுள்ள முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையம் மற்றும் பகல் பராமரிப்பு வசதிக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 10.07.2020 அன்று சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.
மாவட்ட முன்பிள்ளை அபிவிருத்தி இணைப்பாளர் திரு.வி. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர். திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமை அதிதியாக கலந்து கொண்டு இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லை நட்டு வைத்து சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இப்புதிய நிலையத்தினூடாக அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் கடமைக்கு செல்லும் வேளைகளில் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கும், அரச தொழில் செய்பவர்களின் பிள்ளைகளுக்கு சிறந்த முன்பள்ளி கற்றல் வசதிகள் மற்றும் ஆளுமைகளை விருத்தி செய்ய இந்த நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு விளையாட்டு மைதான வசதிகளும் இங்கு ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர். கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ. நவேஸ்வரன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. நவசிவாயம் நித்தியானந்தி, மண்முனைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. லோகினி விவேகானந்தராஜ் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.







