அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் வேலையற்ற ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான பல்நோக்கு தொழிற்பயிற்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுத்து வரப்படுகின்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பில் 4452 இளைஞர் யுவதிகள் இப்பயிற்சியினைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவ்விண்ணபதார்கள் அவர்களின் திறமைகள், தகுதிகள் மற்றும் இலட்சியங்களுக்கேற்ப விண்ணப்பித்த துறைகளுக்கமைவாக தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினூடாக வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இப்பயிற்சி நெறியினை அவ்வப் பிரதேச சௌலாளர் பிரிவுகளில் நடாத்துவதற்காக துறைசார்ந்த வளவாளர்களை இனங்கண்டு பெற்றுக் கொள்வது தொடர்பாக, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையிலான முன்னோடிக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 15.07.2020 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது விண்ணப்பதாரர்கள் தாம் விண்ணப்பித்த விவசாயம், கால்நடை, மீன்பிடி, தச்சுத் தொழில், உருக்கி ஒட்டுதல் (வெல்டிங்), நட்சத்திர தரத்திலான ஹோட்டல் முகாமைத்துவம், தையல், அழகுக்கலை போன்ற 26 துறைகளில் பயிற்சிகள் வழங்குவதற்கான வளவாளர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இப்பயிற்சினை வழங்கவுள்ள வளவாளர்களுடனான கலந்துரையாடல் அவ்வப் பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் 20, 21, 23, 24 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் திட்டமிடல் பணிப்பாளர் திரு.ரொவான் ரொட்டிகோ மற்றும் அதன் மாவட்ட முகாமையாளர் திரு.எஸ்.ஏ.எம். சலீம் மௌலானா, மற்றும் பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






