
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு சம்பந்தமாக மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 15.07.2020 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் கருத்து வெளியிடுகையில் விவசாயிகள் சொந்த நலனுக்காக மட்டுமே என்னோடு பேசுகிறார்கள். எந்த விவசாயிகளும் சுயநலம் இல்லாது சம்மேளனமாக கூடி சகலரும் முடிவு செய்ய வேண்டும். காப்புறுதி செய்யப்படாத விவசாயிகளுக்கு பிரதேச செயலாளர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். நெல் சந்தைப் படுத்தும் சபைக்கு மூவாயிரம் மெற்றிக் தொன் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற மழைக்காலங்களிலும் அரிசியின் விலை கூட்டப்படமாட்டாது. இம் மாவட்ட விவசாயிகள் வெளி வியாபாரிகளுக்கு நெல்லை குறைந்த விலைக்கு கொடுப்பதை தவிர்த்து இம் மாவட்ட வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இங்கு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்து வெளியிடுகையில் கரவெட்டி கிராமம் உப்பு வெள்ளத்தால் மூடப்பட்டு காணப்படுகின்றது. இதனால் விவசாயத்தை மேற்கொள்ள முடியாதுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தாங்கள் எடுக்குமாறு அரசாங்க அதிபரிடம் கேட்டுக் கொண்டனர்.
இந்த விசேட கூட்டத்தில் சிறுபோக நெல் கொள்வனவின் போது அமுல் நடத்தப்படும் விதி முறைகள் மற்றும் விவசாயிகளின் எதிர் பார்ப்புகள் விரிவாக ஆராயப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான அறிவுரைகளும் சபை அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






