
எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பின் மூன்றாம் கட்ட வாக்களிப்பு 16.07.2020 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது.
இதன்படி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் சகல வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினரும் இந்த தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட்டனர். இதன்போது பொது சுகாதார துறையினர் சுகாதார முறைகளை கவனிக்கும் பணிகளில் ஈடுபாடு காட்டினர்.
இம்மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 7342 அரச உத்தியோகத்தர்களும், பட்டிருப்புத் தொகுதியில் 3047 அரச உத்தியோகத்தர்களும், கல்குடா தேர்தல் தொகுதியில் 2426 அரச உத்தியோகத்தர்களுமாக மொத்தம் 12815 பொலிஸ் மற்றும் முப்படையினர் அடங்களான அரச உத்தியோகத்தர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் தபால் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றது. வாக்காளர் அட்டைகள் வீடு வீடாக விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 29 ஆந் திகதி வரையும் இடம்பெறும் எனவும் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் 29ஆந் திகதிக்குப்பின் தபால் அலுவலகங்களில் தத்தமது அடையாளத்தினை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் தெரிவிக்கின்றது.







