
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் உத்தியோக பூர்வ அலுவலகம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான திரு.சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் 11.11.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.
சிறைச்சாலை அதிகாரிகள் சகிதம் விசேட அதிரடிப்படையினருடன் பொலிஸ் பிரிவினர்களின் பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்தில உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் விசேட பூசையுடன் தனது கடமைகளை இன்று ஆரம்பித்தார். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலுவலகத்தில் வைத்து தனது உத்தியோக பூர்வ நியமனக்கடிதத்தினையும் கையொப்பத்தினையும் இட்டு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தார்.
இந் நிகழ்வினை தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் சிறிய சந்திப்பினை மேற்கொண்டு கருத்து தெரிவிக்கையில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தன்னை அர்பணித்து செயல்படப்போவதாகவும் தனக்கு நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு தேவையான சேவையினை வழங்குவதற்கு ஒரு போதும் தயங்காது பணியாற்றவுள்ளதாகவும் அரசாங்கத்திடம் இருந்து மக்களுக்காக எதனை கொண்டு வரவேண்டுமோ அதனை செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ் அலுவலக திறப்பு விழாவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் திரு.பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி திருமதி.மா.மங்களேஸ்வரி சங்கர் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், திருமதி.நவரூபரஞ்சனி முகுந்தன், பிரதம கணக்காளர் திரு.க.ஜெகதீஸ்வரன், மாவட்ட பொறியியலாளர் திரு.ரி.சுமன், உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன், கணக்காளர் திரு.எம்.வினோத், திட்ட பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள், மாநகர சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







