
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பாம்பவுன்டேசன் நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் சமுர்த்தி நிதி உதவிகளை பெற்று வரும் குடும்பங்களுக்கும் , குடிநீர் வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கும் சுத்தமான குடிநீர் நீர் வழங்கி வருகின்றது. இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாம்பவுன்டேசன் நிறுவனம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையுடன் இணைந்து மாவட்டத்தில் 14375 குடும்பங்களுக்கும் , 85 பாடசாலைகளுக்கும் சுத்தமான குடிநீரினை வழங்கியுள்ளது.
அந்தவகையில் 2021 ஆண்டு உலக நீர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் , தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை , பிரதேச செயலகம் , பாம்பவுன்டேசன் நிறுவனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள நீர் வழங்கும் திட்டத்தின் கீழ் U S A I D நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கும் மற்றும் புளியடிமுனை கிராமத்தில் தெரிவு செய்யப்பட சமுர்த்தி குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்வும் ,பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எ. விஜயகுமார் மற்றும் மாவட்ட பாம்பவுன்டேசன் நிறுவன பணிப்பாளர் சுனில் தொம்பே பொல தலைமையிலும் நடைபெற்ற பாடசாலைக்கு குடிநீர் வழங்கும் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே.கருணாகரன் , மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் திரு எம் .எ .சியாத் ,தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை முகாமையாளர் திரு பிரகாஷ், உதவி பிரதேச செயலாளர் திரு ஜி .அருணன் , பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ் . ரவிராஜ் ,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாம்பவுன்டேசன் நிறுவன உத்தியோகத்தர்கள் என் பலர் கலந்துகொண்டதுடன் , நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.







