
மட்டக்களப்பு மாவட்டத்தை மீண்டும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ள கொவிட் 19 வைரசின் மூன்றாது அலையிலிருந்து எமது மக்களை பாதுகாத்து, கொவிட் 19 தொற்றுப் பரவலை மாவட்டத்திற்குள் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறுபட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டம் பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்ட கொவிட் 19 தடுப்புச் செயலணியானது மாவட்டம் பூராகவும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபரும், மட்டக்களப்பு மாவட்ட கொவிட் 19 செயலணியின் தலைவருமாகிய திரு கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சுகாதாரத் துறையினரின் பாரிய பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட மக்களை கொவிட் 19 தொற்றிலிருந்து எவ்வாறு தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்வது, கொவிட் தடுப்பு மருந்து ஏற்றுவதன் ஊடாக நாம் அடையும் நன்மை தொடர்பாகவும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையினை சர்வோதயம் முன்னெடுத்துவருகின்றது. அதன் ஒரு அங்கமாக சர்வோதய சுவோதய நடமாடும் பிரிவின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடமாடும் டிஜிட்டல் வாகனத்தின் கொவிட் 19 விழிப்புணர்வு செயற்பாடுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் 02.05.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மட்டக்களப்பு சர்வோதயத்தின் வெளிக்கள பணிப்பாளர் ஈ.எல்.ஏ.ஹரீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் 5 நாட் செயற்பாடாக இடம்பெறவுள்ள குறித்த விழிப்புணர்வு செயற்பாடானது வீடியோ கானொளி, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடுகள் ஊடாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. சர்வோதயத்தின் தலைவர் சமூக நல விசேட வைத்திய நிபுணர் வின்னயா ஆரியரத்ன அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டவில் இவ்வாறான விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






