முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 1 வகுப்புடைய அலுவலகர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டலில் இருந்து விடுவிப்பதற்கான பாடநெறிப் பயிற்சி செயலமர்வு 02.08.2021 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த பயிற்சி செயலமர்வானது 02.08.2021 ஆந் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக 10 நாட்கள் இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே.கருணாகரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
இதன்போது மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி இந்திராவதி மோகன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட செயலக கணக்காளர் திரு எம்.வினோத், நிருவாக உத்தியோகத்தர் திரு கே.தயாபரன் ஆகியோர் கலந்துகொண்டு இச்செயலமர்வினை ஆரம்பித்து வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 1 வகுப்புடைய 22 உத்தியோகத்தர்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இச்செயலமர்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






