01மட்டக்களப்பில் கோறளைப்பற்று வாகனேரி கிராமசேவகர் பிரிவில் பிறப்பத்தாட்சிப் பத்திரம் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கிய நலிவுற்ற குடும்பங்களில் உள்ள சிறார்களுக்கான பிறப்பத்தாட்சிப்பத்திரம் நடமாடும் சேவையூடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் கோறளைப்பற்று தெற்கு, மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பிறப்பத்தாட்சிப் பத்திரமற்ற நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கான பிறப்புப் பதிவுகள் வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இவற்றில் கோறளைப்பற்று வாகனேரி பிரிவிற்கான நடமாடும் சேவையும், பிறப்பத்தாட்சிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன் தலைமையில் 21/12/2021 அன்று வாகனேரி கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் இடம்பெற்றது. 

நிகழ்வு மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகாத்தர் திரு.வீ.குகதாசனின் ஒருங்கிணைப்பிலும் பிரதேசசெயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகதர் ஏ.எம்.ஆர்.  தாசிமின் ஒழுங்குபடுத்தலிலும் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.எஸ். ராஜ்பாபு, உதவி மாவட்ட பதிவாளர் திரு.இ. சசிகுமார்,  கிராம சேவை உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், உளவளத்துணை உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திசங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் பிரசன்னமாயிருந்தனர்.

இதன்போது புதிதாக பிறப்பினை பதிவுசெய்வதற்காக வருகைதந்த சுமார் 50 விண்ணப்பதார்களது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சுமார் 45 பேருக்கான பிறப்பத்தாட்சிப் பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் உறுப்புரை 07 இன் பிரகாரம் ஒருபிள்ளை தனது பிறப்பினை பதிவு செய்துகொள்வதற்கும் அதற்கான தேசியம்  ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்குமான உரிமையின் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

03020406