
தரம் ஒன்பதில் கல்விகற்கும் மாணவர்களின் பாடத் தெரிவு தொடர்பாக திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி ஆராய்ச்சி, புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு .கே.சிவகுமார் அவர்களது ஒழுங்குபடுத்தலில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த செயலமர்வானது உதவி மாவட்ட செயலாளர் திரு .ஏ.நவேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றிவரும் மாவட்ட திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்த செயலமர்விற்கு வளவாளராக சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.நஸீர் கலந்துகொண்டு சிறப்பான முறையில் வளவாண்மையாற்றியிருந்தார்.
ஒருநாள் செயலமர்வாக இடம்பெற்ற குறித்த செயலமர்வின்போது 13ஆம் ஆண்டின் உத்தரவாத கல்வித்திட்டம் தொடர்பாக ஆண்டு 9 இல் கல்விகற்கும் மாணவர்களுக்கான பாடத் தெரிவு தொடர்பாக இதன் போது உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






