
மட்டக்களப்பு ஸலாமா பௌன்டேஷனின் ஏற்பாட்டில் "உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் 6 வது தடவையாக மேற்கொள்ளப்படும் இரத்ததான முகாம் 17.08.2022 ஆம் திகதி புதன்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாயலில், பள்ளிவாயலின் தலைவர் எம்.எச்.எம்.சியாம் தலைமையில் இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாமிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த இரத்ததான முகாமினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
பள்ளிவாயலின் மௌழவி எச்.எம்.நியாஸ் அவர்களின் ஹிராத் ஓதலுடன் ஆரம்பிக்கப்பட்ட இரத்ததான முகாமில் அதிதிகளின் விசேட உரைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து குருதிக்கொடையாளர்களினால் இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த இரத்ததான முகாமிற்கு ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ .வீ.கே.சிவபாலன் குருக்கள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் அருட்தந்தையுமான நவரெட்ணம் நவாஜி அடிகளாரும் கலந்து சிறிப்பித்ததுடன், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் எம்.பி.மதன், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் திரு.எம்.மதிவண்ணன், மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, எம்.வீ.எம்.பிறிதோஸ் நளினி, மாவட்ட ஊடக அதிகாரி திரு.வீ.ஜீவானந்தன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் செயலாளர் திரு. தியாகராஜா, பள்ளிவாயலின் செயலாளர் அமீன் நளினி உள்ளிட்ட மேலும் பலர் கலந்து சிறப்பித்திருந்ததுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் தியாகராஜா தவனேசன் தலைமையிலான இரத்த வங்கியின் உத்தியோகத்தர் குழாம் இரத்தக் கொடையாளர்களிடமிருந்து இரத்தத்தை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாயலில் கீழ் இயங்கிவருகின்ற ஸலாமா பௌன்டேஷனானது, கடந்த 2016 ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பில் சமூக சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக செயற்பட்டுவரும் ஒரு அமைப்பாக திகழ்ந்துவருவதுடன், இம்முறை 6 வது தடவையாக இந்த இரத்த தானப்பணியினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







