
மண்முனை வடக்கு பிரதேச செயலக “மட்டு முயற்சியான்மை” பிரதேச மட்ட கண்காட்சியும் விற்பனையும் 26.09.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வீ.வாசுதேவன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து விற்பனைக் கண்காட்சி கூடமானது அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது. இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களைப் பார்வையிட்ட அரசாங்க அதிபர் அவர்கள் அவ் முயற்சியை பாராட்டியதுடன், அவர்களுக்காக அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கக் கூடிய உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய திணைக்களங்களின் அதிகாரிகளை பணித்திருந்தார்.
வருடாந்தம் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடாத்திவரும் 'மட்டு முயற்சியான்மை' விற்பனையும் கண்காட்சியுமானது இக்காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை குறைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, இக்கண்காட்சியில் கைத்தறி உற்பத்திகள், கைப்பணிப்பொருட்கள், விவசாய உற்பத்திகள், சேதனப் பசளை உற்பத்திகள் மற்றும் உணவு உற்பத்திப் பொருட்கள் அடங்கலாக பெருமளவான உற்பத்திப் பொருட்களின் காட்சிக் கூடங்கள் நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர்கள், கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், சுயதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் முயற்சியாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.






