
மாகாண மட்டம்,தேசிய மட்டம் மற்றும் சர்வதேச ரீதிகளில் வெற்றி பெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த சாதனை வீர வீராங்கணைகளை கௌரவிக்கும் வர்ண விருதுகள் - 2022 நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி தேவநாயகம் மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிகழ்வு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலொன்று மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 22.09.2022 அன்று திகதி வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கடந்த 2019 - 2021 காலப்பகுதிகளில் மாகாண, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சாதனை படைத்த வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்றுவிப்பாளர்களை வர்ண விருதுகள் வழங்கும் நிகழ்வினூடாக கௌரவிக்கப்படவுள்ளமை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட அரசாங்க அதிபரினால் பல்வேறு ஆலோசனைகள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மாவட்ட செயலக கீத வெளியீடு மற்றும் வெற்றி நினைவு மலர் வெளியீடு போன்றவை தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.






