மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் உரிமைகள் மகளிர் அபிவிருத்தியின் முன்னேற்றங்களை ஆராயும் விசேட நிகழ்வொன்று 18.072019 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சிறுவர் உரிமைகள் மகளிர் அபிவிருத்தி குழுவின் தலைவருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விசேட கூட்டத்தில் இம்மாவட்டத்தில் சிறுவர் மகளீர் உரிமைகளை பாதுகாக்கவும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் மகளீருக்கெதிரான வன்முறைகளை தடுக்க எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன் பிரதேச செயலாளர்கள், சுகாதார, கல்வி, பொலிஸ் திணைக்களம் சார்ந்த அதிகாரிகள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நலன் தொண்டார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
மாவட்டத்தில் இடைவிலகிய மாணவர்களை கல்வித் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்பினை பெற்று மீள இணைப்பதில் பிரதேச மட்ட சிறுவர் மேம்பாட்டு குழுக்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சிறுவர் உரிமைகள் மகளிர் அபிவிருத்தி குழுவின் தலைவருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் இங்கு கருத்து வெளியிட்டார்.
எதிர்காலத்தில் பிரதேச மட்டத்தில் செயல்படும் சிறுவர் மற்றும் மகளீர் மேம்பாட்டு குழுக்களை பலமான செயல்பாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றும் இதனூடாக பிரதேச மட்டத்தில் சிறுவர், மகளீர் மற்றும் முதியோருக்கான உரிமைகள் பாதுகாக்கவும் உரிய பொறுப்புக் கூறுபவர்களாகவும் இக்குழுக்கள் செயல்பட வேண்டுமென்றும் அரசாங்க அதிபர் இங்கு கேட்டுக்கொண்டார்.









