தேசிய மட்ட மத்தியஸ்த தின முதலாவது நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் 19.07.2019 அன்று காலை 9.30 மணியளவில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய அரசாங்க அதிபர் மாவட்டத்தில் பெரும்பாலான பிணக்குகள் மத்தியஸ்த சபைகளுடாகவே தீர்க்கப்பட்டது எனவும், அந்தவகையில் மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் முனைப்புடன் செயற்பட்டமையையும் அவர் இங்கு பாராட்டினார். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 309 மத்தியஸ்த உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதுவரைக்கும் 8566 பிணக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவானது சகல மத்தியஸ்த குழுக்களையும் கண்காணிக்கும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. மக்களின் முறைப்பாடுகள் நீதிமன்றங்களினுடாகவும், காவல்நிலையத்தினுடாகவும், நிதி நிறுவனங்கள் மூலமாகவும் வருவதாக இங்கு உரையாற்றிய மத்தியஸ்த சபையின் இனணப்பாளர் திரு.எம்.ஐ.எம்.அசாத் குறிப்பிட்டார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.ஏ.மன்சூர் உரையாற்றுகையில் இலங்கையின் மத்தியஸ்த சபையின் முன்மாதிரியை இன்று சர்வதேசம் கூட பின்பற்றுவதற்கு ஆலோசனைகளை பெற்றுவருகின்றது. அந்த வகையில் இலங்கையின் மத்தியஸ்த சபையிணை பெருமையுடன் நினைவு கூறவேண்டும் என்றும், இம்மாதம் 18ம் திகதியில் இருந்து 24ம் திகதி வரையும் தேசிய மத்தியஸ்த தினமாக விழிப்புணர்வினை ஏற்படுத்தி, மக்களுக்கு உச்சகட்டமான சேவையிணை செய்ய வேண்டியுள்ளதாக தெளிவுபடுத்தினார். 1988ம் ஆண்டு 72ம் இலக்க நியாதிக்க சபைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டு 1991ம் ஆண்டு ஆணைக்குழுக்கள் அமைத்து வேலைகளை ஆரம்பித்து 28 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் சிறந்த சேவையினை வழங்கி வருவதை குறிப்பிட்டு கூறுகையில் காணிப்பிணக்கு விடயத்தில் சிறப்பாக தீர்வுகளை கொடுத்த மாவட்டம் மட்டக்களப்பு இன்றும் ஒட்டு மொத்தத்தில் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு அற்பணிப்புடன் சேவையாற்றிய தவிசாளர்கள், உபதவிசாளர்கள் மற்றும் மத்தியஸ்த சபை உறுப்பினர்களையும் பாராட்டினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் பிரதம கணக்காளர் திரு.க.ஜெகதீஸ்வரன், கணக்காளர் திரு.க.பிறேமகுமார் மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் தேசிய நிகழ்வு எதிர்வரும் 25ம் திகதி பத்தரமுல்லையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் தலதா அத்து கோறளை தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










