
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச மட்டங்களில் இடம்பெறும் அரச அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகள், அபிவிருத்தி செயற்பாடுகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை மாவட்ட ஊடகப் பிரிவிற்கு வழங்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலின் கீழ் மாவட்ட தகவல் அதிகாரி திரு வடிவேல் ஜீவானந்தனின் தலைமையில் 13.06.2023 அன்று இடம்பெற்றது.
இதன்போது மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இடம்பெறும் நிகழ்வுகளை மாவட்ட ஊடகப் பிரிவிற்கு அறிக்கையிட நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு செய்தி அறிக்கையிடல் தொடர்பான வழிகாட்டல் மாவட்ட ஊடகப்பிரிவு வளவாளர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கிய மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு கே. மதிவண்ணன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் அரசின் விசேட நிகழ்வுகள், அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மிகச்சரியாகவும், துல்லிமாகவும், உடனுக்குடன் வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இச்செயலமர்வில் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களின் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொணடனர்.







