
அறநெறிப் பாடசாலைகளில் ஒரு கைபிடி அரிசி சேகரித்து பிறர் உயிர்வாழ உதவும் செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைக்கமைவாக மாவட்டத்திலுள்ள அனைத்து அறநெறிப் பாடசாலைகளிலும் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வின் உத்தியோகபூர்வ மாவட்ட நிகழ்வு 18.06.2023 அன்று மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் ஒழுங்கமைப்பில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிலுள்ள சைவ மகாசபை அறநெறிப்பாடசாலையின் ஏற்பாட்டில் ஒரு கைபிடி அரிசி சேகரித்து பிறர் உயிர்வாழ உதவுவோம் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் சேகரிக்கப்படும் அரிசி அப்பிரதேசத்திலுள்ள சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படவுள்ளது. களுவாஞ்சிகுடி சைவ மகாசபையின் தலைவர் சிரேஸ்ர விரிவுரையாளர் திரு.கே.மதிசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய பிரதம குரு,அதன் கிராமத் தலைவர்,பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர்,கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்,ஆலயங்களின் நிருவாகிகள்,அறநெறிப்பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.






