தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கை மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நாடெங்கும் 16,800 வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 277 பட்டதாரிகளுக்கு புதிதாக பயிலுனர் நியமனம் வழங்கப்பட்டது.
இந்த விசேட திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு பயிலுனர் நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக "டேபா" மண்டபத்தில் இன்று (01.08.2019) சிறப்பாக நடைபெற்றது.
இந்த விசேட நிகழ்வில் விவசாய, நீர்பாசன இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன், கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்த மாவட்ட நிகழ்வில் இன்று 203 புதிய பயிலுனர் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இது தவிர கடந்த 30.07.2019 அன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 74 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 277 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த், காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம கணக்காளர் திரு.கே.ஜெகதீஸ்வரன், அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.





