
மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை 21.10.2023 அன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்தெருக்கள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் கௌரவ ஸ்ரீபாலகம்லத், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதில் விசேடமாக அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்கான உரிமை மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கான உரிமை மாற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதுதவிர உரிமை மாற்றத்திற்காக விண்ணப்பித்து இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கான தீர்வு காணல், பதிவுச் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளல், வாகனங்களை பரிசீலித்து நிறைச்சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றிதழ் வழங்குதல், சகல வாகனங்களுக்கான உரிமை மாற்றல் விண்ணப்பங்களை பொறுப்பேற்றல் போன்ற சேவைகளும் இடம்பெற்றன.
மேலும் எழுத, வாசிக்க தெரியாத தேர்ச்சி குறைந்த நபர்களுக்காக வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு விசேட பரீட்சை நடாத்தப்பட்டதுடன், நீண்டகாலமாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியாத, ஆவணங்களில் குறைபாடுகளுடன்கூடிய வாகனங்களுக்காக மீண்டும் வருமான அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்வதற்கு சிபாரிசுக் கடிதங்கள் வழங்குதல், சிலிண்டர் கொள்ளளவு 50ற்கும் குறைந்த மோட்டார் சைக்கிள்களை (மோபேட்) பதிவு செய்தல், சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளல். விசேட தேவையுடைய நபர்களுக்காக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குத் தேவையான வைத்திய தொழினுட்பக் குழுவின் சிபாரிசுகளை வழங்குதல், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளின் தெளிவற்ற செஸி மற்றும் எஞ்சின் இலக்கங்களை தேசிய ரீதியாக அச்சிடல், பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்தல் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டன. இந்நடமாடும் சேவையில் மாவட்டத்தின் பலபாகங்களிலுமிருந்து பொதுமக்கள் வருகை தந்து தமது மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிசந்த அனுருத்த வீரசிங்க மற்றும் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு மோட்டார் வாகன பிரதம பரிசோதகர் பொறியியலாளர் ரீ.சிவயோகன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம். பஸீர், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவீஸ்வரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







