
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையில் ஜனசபை தலைவர் கருஜயசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில், இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தின் முதலாவது தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டம் வவுணதீவு கிராம சேவகர் பிரிவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.10.2023 அன்று நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் ஜனசபை செயலாளரின் உரை, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய அவர்களின் வாழ்த்துச்செய்தி, பணிப்பாளர் சட்டத்தரணி அகலங்க ஹெட்டியாராச்சி அவர்களின் இம் முறை தொடர்பான தெளிவூட்டல் ஆகியன காணொளி ஊடாக இடம்பெற்றன.
இதன் போது வவுணதீவு கிராம சேவகர் பிரிவில் உள்ள சாளம்பைக்கேணி, பத்தரை கட்டை, பாம்பர் சேனை, கரடிப்பூவல், மண்டாம்பைக்கேணி ஆகிய கிராமங்களினுள் 13 பெண்களும் 12 ஆண்களுமாக மொத்தமாக 25 உறுப்பினர்களைக் கொண்ட இத்திட்டத்தின் செயற்குழு மக்களால் தெரிவு செய்யப்பட்டது. இம் முறையானது கிராமம் ஒன்றில் உள்ள மக்கள் தமது கிராமத்தில் எவ்வகையான அபிவிருத்தி இடம்பெற வேண்டுமென தாமே தீர்மானிப்பதற்கு வாய்ப்பு வழங்கும் ஒரு முறையியல் ஆகும்.இதன் முன்னோடி வேலைத் திட்டத்தின் கீழ், பங்குபற்றல் ஜனநாயகத்தினை வலுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் 27 முன்மாதிரி இச்சபைகள் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.சுதாகரன், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், ஜனசபை செயலகத்தின்மாவட்ட இணைப்பாளர் பாயிஸ்தீன், பிரதேச செயலக கணக்காளர், கிராம சேவை உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






