
அஸ்வெசும நலன்புரி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் நன்மை பெற தகுதியுடைய, தெரிவு செய்யப்பட்ட மூன்று இலட்சம் வறிய குடும்பங்களை வலுவூட்டும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், அதன் ஓர் அங்கமாக மாவட்ட மட்ட உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் நிகழ்வு 13.07.2024 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பேக்சுவல் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். இதன் போது மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அஸ்வெசும திட்டம் தொடர்பாக தெளிவூட்டப்பட்டதுடன், வலுவூட்டல்களுக்கான பாதை தொடர்பான சுருக்கமான வீடியோ விளக்கக்காட்சிகளும் இதன்போது காண்பிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,223 பயனாளிகள் அஸ்வெசும திட்டத்திற்காக உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாவு அவர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






