மட்டக்களப்பில் கடமையாற்றும் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக சேறு பூசி வரும் நடவடிக்கையை கண்டித்து எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களும் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். இதன்போது இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலக, பிரதேச செயலக உயரதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் அரச செயற்திட்டங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களினூடாக மோசமானதும் உறுதிப்படுத்தப்படாததுமான தகவல்கள் உண்மைக்குப் புறம்பான வகையில் விமர்சிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக சேவையாற்றி வருகின்றனர் ஆனால் அவைகள் அலட்சியப்படுத்தப்பட்டு நேரடியாக எமது நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு பொது இடங்கள், ஊடகங்கள் என்று பாராது எம்மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சிலர் முன்வைப்பதுடன் சேறு பூசுகின்ற நடவடிக்ககையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுகையில் அதனை விமர்சித்து பொய்யான போலியான இணையங்கள் மூலமும் சில பொது கூட்டங்களிலும் பிழையான முறையில் விமர்சிக்கப்பட்டு வருவது அனைவராலும் அவதானிக்கப்படுகின்ற விடயமாகும்.

கடந்த காலங்களில் பல அவதூறான சொற்பிரயோகங்களால் திணைக்கள தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் விமர்சிக்கப்பட்டிருந்தாலும் தற்போது நிருவாக ரீதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை புண்படுத்தும் வகையிலும் அவர் சார்ந்த கீர்த்திமிக்கசேவைக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அதே போன்று பிரதேச செயலாளர் தொடர்பிலும் சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் உண்மைக்குப்புறம்பான அவதூறுகள் மூலம் சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதானது ஒரு எல்லை தாண்டிய செயற்பாடாக கவலை தருகின்றது.

இவ்விடயத்தில் முறையாக செயற்பட வேண்டிய சமூகப்பிரதிநிதிகள் ஓரிருவரும் மக்களை தவறாக வழி நடத்த முனைவதும் கவலைமிக்கதாகும். எனவே இவற்றைத் தொடர்ந்தும் அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது என்ற அடிப்படையில் வெளியிடப்பட்ட விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 11 ஆந் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து நிருவாக சேவை உத்தியோகத்தர்களும் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம்.

அவலங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் பொது மக்களுக்கு பொறுப்பு வாய்ந்த பணி புரியும் எமது உத்தியோகத்தர்களை மனதளவில் பாதிக்கின்ற போலிப் பிரச்சாரங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் தனிப்பட்ட கோபதாபங்களையும் காழ்புணர்ச்சிகளையும் பொய்யான முக நூல்களில் பதிவிடும் எந்தவொரு பதிவையும் நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் பிரதி தலைவருமான திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் உதவிப்பதிப்பாசிரியர் திரு.ஏ.எம்.அல்அமீன் உட்பட அதன் உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

DSC 0450DSC 0419DSC 0442DSC 0446DSC 0423DSC 0428DSC 0443