
எதிர்வரும் செப்டம்பர் 21ஆந் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் 449606 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
22.08.2024 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், மாவட்டத்தின் 3 தேர்தல் தொகுதிகளான கல்குடா தொகுதியில் இருந்து 134104 பேரும், மட்டக்களப்பு தொகுதியில் இருந்து 210293 பேரும், பட்டிருப்பு தொகுதியில் இருந்து 105289 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை இத்தொகுதிகளிலுள்ள வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்வதற்காக 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் கல்குடா தொகுதியில் 123 வாக்குச் சாவடிகளும், மட்டக்களப்புத் தொகுதியில் 197 வாக்குச் சாவடிகளும், பட்டிருப்புத் தொகுதியில் 122 வாக்குச் சாவடிகளுக் அமைக்கப்படவுள்ளன. இதுதவிர தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் பணி எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி ஆரம்பமாகின்றது. இதனடிப்படையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் 4ம் திகதி தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.
மேலும் செப்டம்பர் 5ம், 6ம் திகதிகளில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் ஏனைய திணைக்கள அரச உத்தியோகத்தர்கள் தமது திணைக்களங்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தினங்களில் வாக்களிக்கத் தவறும் அரச உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 11ம், 12ஆந் திகதிகளில் தத்தமது மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூலம் வலுக்களிப்பதற்கு 13448 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 13116பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 332 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாவட்டத்தில் இதுவரை 11 தேர்தல் சட்டவிதிமுறை மீறல்கள் பதிவாகியுள்ளதுடன் தேர்தல் பாதுகாப்புக்காக போலீசார் பல பகுதிகளிலும் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார். இவ்வூடகசந்திப்பின்போது மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம்.சுபியான் மற்றும் தேர்தல் முறைப்பாடுகளுக்கான உதவி தெரிவத்தாட்சி அலுவலர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





