தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று 18.09.2019 முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 இன்று வரையும் 3,423 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 4,359 மாதிரி வீட்டுத்திட்டத்தினால் 13,525 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை கலாச்சார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இத்திட்டமானது தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை கலாச்சார அமைச்சின் சிபார்சில் நாடு பூராகவும் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் வேலைத்திட்டம் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு இன்று வரைக்கும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் 19 ஆவது திட்டத்துடன் 4,359 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கல்குடாத்தொகுதியில் 56 மாதிரிக்கிராமங்களும், மட்டக்களப்பு தொகுதியில் 81 மாதிரி வீட்டுத்தொகுதியும், பட்டிருப்பு தொகுதியில் 49 மாதிரி வீட்டுத்தொகுதி அடங்கலாக 186 மாதிரி வீட்டுத்தொகுதிகள் இதுவரையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2,579 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தில் வீடு நிர்மாணித்தல், வீட்டு வசதிகள், உள்ளக வீதி புனரமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதிகள், உள்ளிட்ட வசதிகளுக்காக 3,423 மில்லியன் ரூபா நிதியில் 13,525 பொதுமக்கள் மட்டக்களப்பில் நன்மையடைந்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.










