
புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னேடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக கிளீன் ஶ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி) ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 16.01.2025 அன்று இடம்பெற்றது.
கிளீன் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று விடயங்களான சமூக அடிப்படை, சுற்றாடல் அடிப்டை மற்றும் நெறிமுறை அடிப்படையிலான விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன்போது வழங்கப்பட்டன. அழகான தீவு சிரிக்கும் மக்கள் எனும் கருப்பொருளை அடைவதற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி) அவர்களினால் வழங்கப்பட்டது. நீடித்த சமூக கலாசார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் தனிநபர் மாற்றத்தினுடாக அதனை ஏற்படுத்த வேண்டும் என இதன் போது கருத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் உத்தியோகத்தர்களாகிய நாம் மக்களை அலைக்களிக்காது துரிதமாக வினைத்திறனான சேவையை வழங்க வேண்டும் எனவும் சமூகத்தினுடாகவும் அரச துறைகளினுடாகவும் மாற்றத்தை எற்படுத்தி ஆரோக்கியமான நாட்டை அனைவரும் உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.






