மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முதியோர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று கடந்த 07-10-2019 அன்று மாலை களுவாஞ்சிகுடி நந்தவனம் முதியோர் இல்ல வளாகத்தில் இடம்பெற்றது.
முதியோருக்கான தேசிய செயலகம், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம், மாவட்ட செயலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கௌரவிப்பு விழாவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் திரு.என்.மதிவண்ணன், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரட்ணம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இங்கு ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், மலர்மாலை அணிவித்தும், சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி முதியோர் சம்மேளன தலைவர் திரு.கே.பேரின்பநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதியோர்களால் நாட்டு கூத்து, நடனம், பாடல் போன்ற சிறப்பு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இது தவிர மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் முதியோர் சம்மேளனங்களுக்கும் சிறப்புப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
இங்கு அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் இன்றும் முதியோர்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர் அவர்களை மேலும் ஊக்குவிக்க எதிர்காலத்தில் முதியோர் இல்லங்கள் என அழைக்கப்படாது சிரேஸ்ட பிரஜைகள் நிலையங்கள் என மாற்றம்பெறவேண்டும். இதேபோல் இத்தகைய திறமை அனுபவங்களை கொண்டுள்ள முதியோர்களை ஒதுக்கி விடாது அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்களில் இணைத்து அவர்களை சமூகமயப்படுத்த அரச உத்தியோகத்தர்கள் அக்கறை செலுத்தவேண்டும் எனக்குறிப்பிட்டார்.

















