
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் உள்ள வறுமை நிலைக்குட்பட்ட மாணவர்களை இணங்கண்டு அதில் 400 மாணவர்களுக்கு கியுமெடிக்கா லங்கா நிறுவனத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 21.12.2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கியுமெடிக்கா லங்கா நிறுவனமானது 2013 அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட செயலகத்துடன் இணைந்து 2500 பேருக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிய நிறுவனம் என்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் முகமாக தற்போது யாழ்ப்பாணம் ,மன்னார் ,வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் தலா 400 படி 2000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கியிருக்கின்றது என்றும் கியுமெடிக்கா லங்கா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு என்.நல்லசிங்கம் தெரிவித்தார்.
மேலதிக அரசாங்க அதிபர் கல்வி தொடர்பாக கருத்து வெளியிடுகையில்; தொழிநுட்ப கல்வியறிவு மற்றும் ஆங்கில கல்வியறிவு இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமாகக் காணப்படுகிறது என்றும்; வறுமை நிலையில் பின் தங்கியுள்ள மாணவர்களில் அனேகமானோர் கல்வியை இடைநடுவில் விட்டுவிலகுகின்றார்கள் இந்நிலை மாறி அனைத்து மாணவர்களும் கல்வியில் சிறந்ததொரு பிரஜையாக வரவேண்டும் என்றும் வாழ்த்து கூறினார். மேலும் இந்நிகழ்வை நடத்திய நிறுவனத்தினருக்கு நன்றியினை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி ரேகா , கியுமெடிக்கா லங்கா நிறுவனமானத்தின் கணக்காளர் திரு ரொனி தேவானந்தன் , வெளிகள ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயரஞ்சன் மற்றும் கியுமெடிக்கா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து சிறப்பித்தனர்.







