சிறு போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் நெல் விற்பனையில் விவசாயிகள் எதிர்நோக்கும் விலைப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் திரு.பி.பீ ஜெயசுந்தர அவர்களின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட மட்டத்தில் நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்செயற்பாட்டை மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுத்து செல்லும் முகமாக 18.01.2020 அன்று அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று மாவட்ட செயகத்தில் நடைபெற்றது. விலை நிர்ணயத்தை நெல் சந்தைப்படுத்தும் சபையினரால் நிர்ணயிக்கப்பட்டு நியாயமான விலையில் நெற்கொள்வனவு செய்வதற்காக சகல நடவடிக்கைகளும் அடுத்தவாரம் முதல் மேற்கொள்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்த விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த், காணி மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திரு.கே.ஜெகன்நாத், விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் திரு.எஸ்.பேரின்பராஜா, மாவட்ட செயலகத்தில் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், உரச்செயலக பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப்பிரிவின் அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம கணக்காளர் திரு.க.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்ற நெற்களை களஞ்சியப்படுத்துகின்ற செயற்பாட்டில் சில சவால்கள் காணப்படுவதாகவும் அதற்காக 9 களஞ்சிய சாலைகள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கு மேலதிகமாக 6 களஞ்சிய சாலைகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு அவசர திருத்த பணிகளை மேற்கொண்டு அங்கு நெற்களை களஞ்சியப்படுத்துவது சம்மந்தமாக இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன.
இம்முறை 60,459 ஹெக்டெயரில் நெற்கள் பயிரிடப்பட்டுள்ளதாகவும் இவ்விளை நிலங்களில் இருந்து அதிகளவான அறுவடைகளை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் அதிகளவான நெற்கள் கொள்வனவு செய்யும் போது திருகோணமலை, வெலிகந்தை, பொலநறுவை போன்ற பகுதிகளிலுள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சிய சாலைகளில் களஞ்சியப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி கூட்டத்தில் இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் செயற்திட்டங்களை உருவாக்குவது சம்மந்தமாக புதிய ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படுவதாகவும் கலந்துரையாடப்பட்டது.











