
உலக உணவுத் திட்டத்தின் இலங்கை நாட்டிற்கான பணிப்பாளர் அப்துர் ரஹீம் சித்தீக் உலக உணவுத்திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.வவுணதீவு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பன்சேனை கிராமம், முந்தானை ஆறு நீர்ப்பாசன திட்டம் மற்றும் கிரான் பிரதேச செயலகத்திற்குற்பட்ட வாகனேரி கிராமம் என்பவற்றில் தனது மேற்பார்வை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார்.வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் செயல்திட்டங்களை அவதானித்ததுடன் பிச்சையடிச்சேனை குளத்தின் புனர்நிர்மானம் தொடர்பாகவும் தனது ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.
இக்குளத்தில் இருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்வழங்குவதற்காக புதிதாக அமைக்கப்பட்ட கால்வாயினை அவதானித்ததுடன் கடந்த காலத்தில் கால்வாய் இன்மையினால் அதிகளவான நீர்விரயம் ஏற்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
உலக உணவுத்திட்டத்தினூடாக இம்மாவட்டத்தின் விவசாயக் கிணறுகள் திருத்தம், சிறு குளங்கள் திருத்தம், கோழி வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், வாய்க்கால் துப்பரவு செய்தல், நெசவு தொழில், மக்களின் போசாக்கு, விவசாய உள்ளீடுகள் வழங்கள், ஆடு வளர்ப்பு, சிறிய அளவிலான பால்உற்பத்தி உற்பட வாழ்வாதார செயற்றிட்டங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
செங்கலடியில் அமைந்துள்ள முந்தானை ஆறு திட்டப்பணிப்பாளர் காரியாலயத்தில் நீர்ப்பாசன திட்டம் தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்தார். இக் கலந்துரையாடலின் போது திட்ட பணிப்பாளர் சமன் வீரசிங்க, வதிவிட பொறியியலாளர் எம்.மயூரன், பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் அ.விஷ்ணுரூபன் கலந்து கொண்டனர்.
கிரான் பிரதேச செயலகத்திற்குற்பட்ட வாகனேரி கிராமத்தில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்களை கேட்டறிந்தார், எதிர்வரும் காலங்களில் உலக உணவுத்திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதார செயற்றிட்டங்களினுடாக உதவிகளை செய்து தருவதாக இதன் போது கருத்துதெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, வவுணதீவு பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதாகரன், கிரான் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ராஜ்பாபு, உதவிதிட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர். ஜதீஸ்குமார் உட்பட உலக உணவுத் திட்டத்தின் அரசபங்காளி இணைப்பு உத்தியோகத்தர் முஸ்தபா நிஹ்மத்,உலக உணவுத்திட்டத்தின் அதிகாரிகள் மற்றும் பல திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.







